வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட பிராணிகள் மற்றும் வீட்டிலிருந்தோர் மீது குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல்!

IMG 20210428 105120
IMG 20210428 105120

வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட பிராணிகள் மற்றும் வீட்டிலிருந்தோர் மீது குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி அக்கராயன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் குழு சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,

குறித்த குழுவினர் அங்கிருந்த இரண்டு வளர்ப்பு பன்றிகள், வான்கோழி உள்ளிட்டவற்றை வாளினால் வெட்டி படு கொலை செய்துள்ளதுடன், வாழ்வாதார வளர்ப்புக்களின் இருப்பிடங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த வீட்டு உரிமையாளரின் மனைவியையும் தாக்கியதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டுரிமையாளர் தெரிவிக்கின்றார்.

இரு நபர்களிடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிணக்கு விரிவடைந்து இவ்வாறு குழுத்தாக்குதலாக உருப்பெற்றுள்ளது. இந்த நிலையில் குறித்த குழுவினர் வாழ்வாதார வளர்ப்புக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தமக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரிடம் தெரிவித்த போதிலும் அவர்கள் உடனடி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அக்கராயன் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.