படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்கள்.
இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவரான தராகி என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 16 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஊடகவியலாளர் சிவராம் கடந்த 2 ஆயிரத்து 5 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இலங்கையில் நிலவும் ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலைக் காட்டும் சிவராம் மற்றும் ரஜீவர்மன் உள்ளிட்டவர்களின் படுகொலை நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஊடகவியலாளர்களின் கொலைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.