சடுதியாக அதிகரித்துள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கையாளும். சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் இலாபம் தேடுவதை எதிர் தரப்பினர் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், புத்தாண்டு காலத்திற்கு பின்னர் கொவிட்-19 வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்துள்ளது. இவ்விடயத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பது பயனற்றது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் முதல் மற்றும் இரண்டாம் சுற்றினை அரசாங்கம் சிறந்த முறையில் கையாண்டது. இதன் காரணமாகவே கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை வெற்றிகரமாக கையாண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 10 ஆம் இடத்தை பிடித்தது.
பலம் கொண்ட நாடுகளினால் கூட கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. தற்போது நாட்டில் வைரஸ் தொற்று எதிர்பார்க்காத வகையில் பரவலடைந்துள்ளது. தற்போதைய நெருக்கடி நிலைமை அரசாங்கம் வெற்றிகரமாக கையாளும்.
நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறுகிய அரசியல் தேவைக்காக தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்வதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.
பொது போக்குவரத்து சேவைகளில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக பின்பற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் கண்காணிக்க காவல்துறையினர் சிவில் பிரஜைகளை போல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாத தனியார் பேருந்து உரிமையார்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.