இணையவழியில் நிதிமோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

kaithu
kaithu

இணைய வழியில் பாரிய அளவு நிதிமோசடி செய்த குற்றச்சாட்டில் திருகோணமலையைச் சேர்ந்த 37 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்னமேரி தாசன் என்ற குறித்த நபர், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கி பயணிக்கத் தயாரான போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாக, காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் அமெரிக்காவிலிருந்து செயற்படுகின்ற, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவருடன் இணைந்து, பாரிய அளவிலான நிதி மோசடியை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள நபர், அங்குள்ள வங்கிக் கணக்குகளுக்குள் பிரவேசித்து, அவற்றிலிருந்து திருகோணமலை குறித்த இளைஞரது கணக்கிற்கு பணத்தை மாற்றி, அதனை மீண்டும் தமது கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக திருகோணமலையைச் சேர்ந்த குறித்த நபர், 86 மில்லியன் ரூபாவை பெற்றிருப்பதாகவும், அதிலும் 73 மில்லியன் ரூபாவை மற்றுமொரு கணக்கிற்கு மாற்றி, எஞ்சிய பணத்தை தமது கணக்கில் பேணிவந்திருப்பதாகவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.