இன்று முதல் தனியார் பஸ் சேவையினை 25 வீதத்தால் குறைக்க தீர்மானம்!

1575975360 bus 2
1575975360 bus 2

பொது மக்களின் போக்குவரத்து பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால்  இன்று முதல் தனியா ர் பேருந்து போக்குவரத்து சேவையினை 25 சதவீதத்தினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அலுவலக தனியார் பேருந்து சேவையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. குறைந்தளவிலான பயணிகளுடன் தனியார் பேருந்து  உரிமையாளர்கள் சேவையில் ஈடுப்படுவதால்  பொருளாதார ரீதியில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

மருதானை சனசமூக கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதுவருட கொவிட் கொத்தணி தாக்கத்தின காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட பகுதிகளில் கூட பொது மக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுப்படுவது சுகாதார பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் முடக்கப்பட்டுள்ளது.

 பேருந்துகளில் ஆசன அடிப்படையில் மாத்திரம் பயணிகளை ஏற்ற வேண்டும் என சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளார்கள். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஆசன எண்ணிக்கையில் கூட பயணிகள்  பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவது கிடையாது. பொது மக்கள் பொத போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவது ஒப்பீட்டளவில் தற்போது குறைவடைந்துள்ளது.

புத்தாண்டு காலத்திற்கு முன்னர் தனியார் பேருந்துகள் 90 சதவீதமளவில் போக்குவரத்து  சேவையில் ஈடுப்படுத்தப்பட்டன. பயணிகள் இல்லாமல் பேருந்துகளை போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்துவது பயனற்றது. ஆகவே இன்று முதல் தனியார் பேருந்துகளை போக்குவரத்து சேவையில் இருந்து 25 சதவீதத்தினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறைவான பயணிகளுடன் போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் போது தனியார் பேருந்து உரிமையாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகிறார்கள். போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுப்படுவதற்கு எரிபொருள் செலுத்துவதற்கு கூட வருமானம் கிடைக்காத அளவிற்கு நெருக்கடியான சூழ்நிலை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

அலுவலக பேருந்து சேவைகள்  வழமை போன்று சேவையில் ஈடுப்படும். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையினை பயன்படுத்தும் பயணிகள் முற்பதிவு நிலையத்தில் ஆசனங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாவும் அவர் இதன்போது கூறினார்.