இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றுவதற்கு 6 இலட்சம் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இடம்பெற்று வருகின்றது. அதனால் எஸ்ட்ரா செனிகா, முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசி வேறு தடுப்பூசிகளுடன் கலந்து வழங்க முடியுமா என பரிசோதனை செய்து வருகின்றோம். அத்துடன் மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி வந்தால் இதனை கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று கடந்த சில வாரங்களாக உலகளாவிய ரீதியில் அதிகரித்திருக்கின்றது. இந்த தொற்று நிலை அடிக்கடி மாற்றமடையும் தன்மை கொண்டது. அதனால் திடீரென தொற்றாளர்கள் அதிகரிக்கலாம். மரணங்கள் அதிகரிக்கலாம். அதனால் அதற்கு ஏற்றவகையில் நாங்கள் முகம்கொடுத்து இதனை கட்டுப்படுத்தவேண்டும். எதிர்க்கட்சி தெரிவிப்பதுபோல் இது அரசாங்கத்தின் தவறால் ஏற்பட்டது அல்ல.
மேலும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளை அரசாங்கம் திட்டமிட்டு குறைக்கவில்லை. கடந்த சில மாதங்களாக கொவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படும் வீதம் குறைவாக இருந்தது. அதனால் பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் குறைவடைந்தன. இது சாதாரணமாக இடம்பெறுவதாகும். ஆனால் தற்போது கடந்த மாதம் 12 ஆம் திகதிக்கு பின்னர் பீ.சீ.ஆர் பரிசோதனைகளை அதிகரித்திருக்கின்றோம். வெறுமனே பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு மாத்திரம் இதனை கட்டுப்படுத்த முடியாது. அதனால் மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ந்துகொண்டு, கொவிட் தொடர்பான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட்டால் இதனை கட்டுப்படுத்த முடியும் என்றார்.