இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல.இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது.
பல புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்றைய உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி வழங்குகிறது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் தொடர்பில் கருத்து கூறியபோது அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவித்த போது, உயர்தரப் பரீட்சை எழுதி அதில் பலன் பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள். முயற்சிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். பெறுபேறு என்பது ஒரு புள்ளிவிபரம். அது எதுவானாலும், அதைக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள்.
நீங்கள், உங்களுக்கு முன்னர் பிறந்தவர்களை விட அதிஷ்டசாலிகள். ஆகவே, சந்தோஷத்தையும், கவலையையும் ஒருசேர ஓரிரு நாட்களில், ஓரமாக வைத்து விட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி, காரியத்தில் கண்ணாக நகருங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.