மருத்துவ பற்றாக்குறைகளை நட்பு நாடுகளுடன் பேச வேண்டும் – கயந்த கருணாதிலக

download 28
download 28

ஒட்சிசன் சிலிண்டர்கள் , அவசர சிகிச்சை பிரிவு, அம்புலன்ஸ் வண்டிகள் உள்ளிட்டவற்றில் காணப்படுகின்ற பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை பெற்றுக் கொள்ள நட்பு நாடுகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஒட்சிசன் சிலிண்டர்கள் , அவசர சிகிச்சை பிரிவு, அம்புலன்ஸ் வண்டிகள் உள்ளிட்ட மருத்துவ தேவைகளில் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொண்டு , துரிதமாக இந்த பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதோடு , ஏற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறில்லை என்றால் மருத்துவர்கள் கூறுவதைப் போன்று எதிர்வரும் வாரங்களில் ஏற்படக்கூடிய பாரதூரமான நிலைமையிலிருந்து நாட்டை மீட்க முடியாது. கட்டிடங்களை தெரிவு செய்து 5,000 படுக்கைகளை ஏற்பாடு செய்தால் மாத்திரம் போதாது. 5,000 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான வைத்தியர்கள் , சிகிச்சை பெற்ற தாதிகள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களை பணிக்கமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொவிட் கட்டுப்படுத்தலில் நட்பு நாடுகளுடன் சுமூகமான உறவைப் பேண வேண்டும். நாட்டுக்கு தேவையான சகல மருத்துவ உபகரணங்களையும் அவற்றிடமிருந்து துரிதமாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கொவிட் கட்டுப்படுத்தலுக்காக கிடைக்கப் பெற்ற நன்கொடைகளை இப்போதேனும் மக்களுக்காக பயன்படுத்த வேண்டும்.

கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் உலக வங்கியை நாடுகிறது. அண்மையில் இடம்பெற்ற சீன இறக்குமதி வரி மோசடியை தவிர்த்திருந்தால் அந்த நிதியில் நாட்டிலுள்ள சகலருக்கும் தடுப்பூசியை கொள்வனவு செய்திருக்க முடியும் என்றார்.