மன்னாரில் மேலும் 10 பேருக்கு கொரோனா! மொத்தம் 400 ஆக அதிகரிப்பு!

DSC 1163 1
DSC 1163 1

மன்னார் மாவட்டத்தில் மேலும் 10 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை (16) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 400 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 728 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் யாழ்ப்பாணத்தில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் நேற்று சனிக்கிழமை(15) மாலை கிடைக்கப் பெற்றுள்ளது. அவற்றில் 10 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் மன்னார் பெரியகமம், சாவக்காடு, உப்புக்குளம், பேசாலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களாவர். அவர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 527 பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், இந்த வருடம் ஜனவரி தொடக்கம் மொத்தமாக 400 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மே மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரை 41 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் இது வரை 3 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த மாதம் 1,288 பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 527 பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான முடிவுகள் எதிர் பார்க்கப்பட்டுள்ளது.

காய்ச்சலுடன் மூச்சு எடுப்பதில் சிரமம் அல்லது சுவாச குணங்குறிகளுடன் மூச்சு எடுப்பதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையை நாடுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.