வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கல் நிகழ்வுக்கான தீர்த்தம் எடுக்கும் பாராம்பரிய நிகழ்வு நேற்று 17.05.21 நடைபெற்றுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் சென்று தீர்த்தம் எடுத்துள்ளார்கள்.
தீர்த்தம் எடுக்க செல்பவர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவற்துறையினருக்கு விபரம் கொடுக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தீர்த்தம் எடுக்க செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதற்கமைய முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்த்தம் எடுப்பதற்காக கிரியைதாரர்கள் உள்ளிட்டவர்கள் பூசை வழிபாடுகளுடன் சென்று முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் தீர்த்தம் எடுத்து மீண்டும் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தனர்
நடை பயணமாகவே கிரியைதாரர்கள் தீர்த்தம் எடுக்க செல்வது வழமையாக பாரம்பரியமாக இருந்தபோதும் மக்கள் கூட்டத்தினை தவிர்க்கும் முகமாக இம்முறை உழவியந்திரத்தில் சென்று தீர்த்தம் எடுத்துள்ளார்கள்.
தீர்த்தம் எடுக்கும் தீர்த்தக்கரையில் மக்கள் மற்றும் பக்த்தர்கள் எவரும் கலந்துகொள்ளாதவாறு படையினர் காவற்துறையினர்,பிராந்திய சுகாதார பணிமனையினர் பொதுசுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபட்திருந்தனர்
இவ்வாறான நிலைமைகளில் தீர்த்தம் முள்ளியவளை காட்டா விநாயாகர் ஆலயம் கொண்டு வரப்படட பின்னர் அங்கு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு மடை பரவி இன்று அதிகாலை வேளையில் உப்புநீரிலே விளக்கேற்றி பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன
இங்கு பூசைகள் இடம்பெற்று 23-05-2021 காட்டா விநாயகர் ஆலய பொங்கல் உட்சவம் இடம்பெற்று எதிர்வரும் திங்கட்கிழமை 24.05.21 அன்று அதிகாலை இங்கிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் நிகழ்விற்கு தீர்த்தம் எடுத்து செல்லப்பட்டு அங்கு பொங்கல் இடம்பெறும்
இம்முறை பொங்கல் நிகழ்விற்கு பக்தர்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .