நல்லாட்சி அரசு அமையப்பெற்றதும் பங்கரவாதத் தடைச்சட்டம் முதலில் என்மீதுதான் பாய்ந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி எங்களை அழிக்க முற்பட்டவர்கள் இன்று அதற்கு எதிராக பேசுவது வேடிக்கையாகவுள்ளதென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுபவர்கள் குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைப்பதுடன், திட்டமிட்டு கைதுசெய்யப்படுவதாக அரசின் மீது சேறுபூசும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
நல்லாட்சி அரசு அமையப்பெற்றதும் பங்கரவாதத் தடைச்சட்டம் முதலில் என்மீதுதான் பாய்ந்தது. அதை மறந்துவிட்டு பேசுகின்றனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி எங்களை அழிக்க முற்பட்டவர்கள் இன்று அதனை பிழையென கூறுகின்றனர்.
என்னையும் 65 நாட்களுக்கும் அதிகமாக சி.ஐ.டி.யில் தடுத்து வைத்திருந்தனர். படுப்பதற்கு பாயைக்கூட கொடுக்காத நிலையில்தான் எங்களை நல்லாட்சி அரசு நடத்தியது.
எமது தாய், தந்தை, உறவுகளை வீடுகளில் கட்டிவைத்து இந்தச் சட்டத்தை பயன்படுத்தியிருந்தனர். இவ்வாறு பயங்கரவாதத் தடைச்சட்டத்ததை பயன்படுத்தியவர்கள் இன்று அதுபற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது.
குறிப்பாக தமிழ் தேசியவாதிகள் இருந்த காலப்பகுதியில் என்ன செய்தனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒழிக்க தமிழ்த் தேசியவாதிகள் எடுத்த நடவடிக்கை என்னவென்ற கேள்வி மக்களிடம் உள்ளது.
60 வருடங்களாக நீங்கள் இதனை பேசிக்கொண்டுதான் இருக்கின்றீர்கள். நாம் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் எம்மை புலிகள், சிங்கங்கள், பறவைகள் எனக் கூறியிருந்த பல உறுப்பினர்களை பார்த்துள்ளேன். சாணக்கியனின் வயதும் எனது அரசியல் பொதுவாழ்வும் ஒன்று நாம் வன்முறை புலிகளாக இருக்கவில்லை.
வன்முறையை கைவிட்டுவிட்டு புலிகளிடமிருந்து பிரிந்து வந்திருந்தது இந்த உலகத்துக்கும் நாடாளுமன்றத்தில் அனைவருக்கும் தெரிந்த விடயம். 30 வருடங்களாக கிழக்கில் நிலவிய வன்முறையான சூழல் ஒழிக்கப்படாமல் போயிருந்தால் நீங்களும் இன்று நாடாளுமன்றில் பேச முடியாத நிலையே இருந்திருக்கும் என்றார்.