முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கி வருகின்ற ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா கொத்தணி காரணமாக கடந்த 17ஆம் திகதி இரவு 11 மணி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு முள்ளியவளை புதுக்குடியிருப்பு ஆகிய காவல்துறை பிரிவுகள் முழுமையான முடக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட 11 கிராம அலுவலர் பிரிவுகளைதவிர ஏனைய 54 கிராம அலுவலர் பிரிவுகளையும் முடக்க நிலையில் இருந்து விடுவிப்பதற்காக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் கோரியிருந்தனர்.
அதற்கமைவாக இன்று காலை 6.30 முதல் குறித்த முல்லைத்தீவு மாவட்டத்தின் 11 கிராம அலுவலர் பிரிவுகள் தவிர ஏனைய பிரிவுகள் முடக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பேணாது அதிக அளவில் ஒன்று கூடி பொருட்களை வாங்குவதற்காக முண்டியடிக்கும் நிலமைகளை முல்லைத்தீவில் காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதான நகரம் முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ளமையால் அங்கு கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் நகர் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.