கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் கமலராஜன் மீது ஒய்வு நிலை பணியாளர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டிருந்தார். இவ்விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் கண்டன அறிக்கை விடுத்துள்ளது .
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த 19ஆம் திகதி காலை கல்விப்பணிப்பாளர் அவரது கடமை நேரத்தில் அலுவலகத்தில் வைத்து முன்னாள் பாடசாலை பணியாளர் ஒருவரால் உடல்ரீதியாக மோசமாகத் தாக்கப்பட்டமை அதிர்ச்சியை தருகிறது
கல்விசார் பணி என்பது சமூக நலனை முதன்மைப் படுத்தும் பணி இதில் வலயத்துக்கு தலைமை தாங்கும் வலயக் கல்விப் பணிப்பாளர் முக்கியமானவர். தார்மீக அடிப்படையில் இவ்வாறு பணி செய்பவர்கள் வன்முறைக்கு உள்ளாவது என்பது இந்த பிரதேச மக்களின் வன்முறை உணர்வின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இதனால் வலயத்தின் பாடசாலை பிள்ளைகளின் கல்விக்காக உழைப்பவர்கள் ஆளுமைகள் எத்தகு மன உளைச்சலுக்கு ஆளாகுவர் என்பதும் ஏற்கனவே தாழ்நிலையில் இருக்கும் எமது பிரதேச கல்வி பண்பாட்டை முன்னெடுக்க முடியாது சிதைக்கும் செயல் என்பதையும் நாம் இந்த வேளையில் மனவருத்தத்தோடு சுட்டிக் காட்டுகின்றோம்.
கல்விப் பணியில் உள்ளவர்கள் மட்டுமே தோல்விக்கு பொறுப்பு என்ற சமூக நிலை மிகவும் பிற்போக்கானது மக்கள் அனைவரும் பொறுப்பு என்பதை சமூகம் புரிந்து எங்கு நடந்தாலும் அநியாயங்களை தடுத்தல் அவசியம்.
கடந்த காலங்களில் அதிபர்கள் ஆசிரியர்கள் மீதான சமூகத்தின் வன்முறையாளர்கள் தாக்குதல்கள் செய்துள்ளமை அதற்கு சட்டரீதியாக காத்திரமான படிப்பினை தரும் நடவடிக்கைகளை சட்டத்துறை மேற்கொள்ளாமை என்பனவும் இத்தகு மோசமான நிலைக்கு காரணம் என்பதே எமது கணிப்பு ஆகும்.
குறித்த வன்முறை மூலம் ஒரு சூழலில் சமநிலையை குலைத்துள்ளமை அசிங்கப்பட்டுள்ளமை இப்பிரதேச கல்வி வரலாற்றுக்கு ஏற்பட்ட கறையாகவே அதிபர் சங்கம் கருதுகிறது.
எனவே வலயக்கல்வி பணிப்பாளர் மீதான தாக்குதலை கல்விப் பணி செய்யும் சகலர் மீதான அவமதிப்பாக கருதுகிறோம் அவ்வாறான அவமதிப்புக்கு யாரும் இச்செயலமைப்பை உட்படுத்த முடியாது முடியாது என்பதை அனைத்து சமூகத்திற்கும் வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறோம். இதனை தொடர்ந்து நடக்காது சூழலை மாற்றும் அணுகுமுறைகளை சமூகம் மேற்கொள்ள வேண்டியுள்ளது கோரி நிற்கிறோம்.