தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன் அடங்கியிருந்த பொருட்கள் மற்றும் எரியுண்ட கப்பல் பாகங்கள் உள்ளிட்டவை இன்று நீர்கொழும்பை அண்டிய கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கியிருந்தன.
இவ்வாறு கரையொதுங்கிய, இரசாயனங்கள் உள்ளிட்ட மேலும் சில பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச்சென்ற நபர்களைத் தேடி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து விழுந்த கொள்கலன்களில் அடங்கியிருந்த பொருட்கள், கொள்கலன்கள் கரையொதுங்கக்கூடிய கடற்கரைகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, திக்ஓவிட்ட முதல் சிலாபம் வரையிலும் வெள்ளவத்தை முதல் பாணந்துறை வரையிலும் உள்ள கரையோர பகுதிகளில் இவ்வாறு விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.