குடாநாட்டின் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்த செய்திகளை அவதானித்து கவலையடைகின்றோம்-வைத்தியர் கேதீஸ்வரன்!

IMG 3559
IMG 3559

கடந்த சில நாட்களாக குடாநாட்டின் ஊடகங்கள் சிலவற்றில் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் கொரோனா தொற்றுக்கான பி சி ஆர் பரிசோதனைகள் தடைப்பட்டுள்ளமைக்கு வடமாகாணத்தின் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அசண்டையே காரணம் என்ற வகையில் செய்திகள் வெளிவந்துள்ளதை அவதானித்து கவலையடைகின்றோம். இச்செய்திகள் எமது திணைக்களம் தொடர்பாக தவறான அபிப்பிராயத்தை மக்களிடையே உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன. எனவே இச்செய்திகள் தொடர்பான உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றோம் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கொரோனா பெரும் தொற்று இலங்கையில் ஆரம்பித்த காலத்தில் வட மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குரிய பி சி ஆர் பரிசோதனை வசதிகள் ஏதும் இருக்கவில்லை. மாகாண சுகாதாரத் திணைக்களம் கேட்டுக்கொண்டதன் பேரில் யாழ் மருத்துவ பீட ஒரு ஒட்டுண்ணியியல் துறையின் ஆய்வுக்கூடத்தில் இப் பரிசோதனைகளைச் செய்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாய்வு கூடத்தில் பி சி ஆர் பரிசோதனைகளைச் செய்வதற்கு பல்வேறு அழிபொருட்கள் தேவை. இவை இரண்டு வகைப்படும்.

1.பி சி ஆர் பரிசோதனை இயந்திரத்திற்கான அழிபொருட்கள் – இவை இயந்திரத்தின் வகைக்கு பொருத்தமானவையாக இருக்க வேண்டும்.
2.ஆய்வு கூடத்தின் ஏனைய அழிபொருட்கள் – தொற்று நீக்கிகள், முகக் கவசங்கள், அங்கிகள் எனப் பல.

இவ்வழி பொருட்களில் ஆய்வுகூட இயந்திரத்திற்கான அழிபொருட்கள் ஒவ்வொரு முறையும் நேரடியாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன் கொழும்பில் அமைந்துள்ள மருந்து வழங்கல் பிரிவிலிருந்து வழங்கப்படும் எனவும் அதற்கான கோரிக்கைக் கடிதம் மருத்துவ பீடத்தின் பீடாதிபதியால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்படல் வேண்டும் எனவும் அப்பொருட்களை பீடாதிபதியின் பெயர் குறிப்பிடப்பட்டு வழங்கப்படும் அனுமதிக்கடிதத்ததுடன் செல்லும் யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்துக்களஞ்சியத்தின் மருந்தாளர் எடுத்து வந்து மருத்துவ பீடத்திற்கு வழங்குவார் எனவும் மருத்துவ பீடத்திற்கும் யாழ் போதனா வைத்தியசாலைக்குமிடையிலான கடிதப்போக்குவரத்தை மாகாண சுகாதாரத் திணைக்களம் ஒருங்கிணைக்கும் எனவும் சுகாதார அமைச்சின் பணிப்புக்கு அமைய எம்மாலும் மருத்தவ பீடத்தினராலும் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதே வேளை ஏனைய அழிபொருட்களும் ஆரம்பத்தில் நேரடியாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்க பிரிவினரால் வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றின் விநியோகம் சீரற்றும் முழுமையற்றும் காணப்பட்டதால் அதற்கான பொறுப்பை மாகாண சுகாதாரத் திணைக்களம் பொறுப்பேற்றுக் கொண்டது. அதன்படி இவ்வழி பொருட்கள் தொடர்ச்சியாக எம்மால் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

காலக்கிரமத்தில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் இப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.