ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 07 பேருக்கு கொரோனா!

02 7
02 7

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

வியாபார நிமித்தம் வெளி மாவட்டங்களுக்கு செல்லவுள்ளோர், கொரோனா தொற்றாளர்களுடன் முதல் தொடர்புடைய உறவினர்கள் என 31 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தாரிக் தெரிவித்தார்.

குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அதிகரித்து காணப்படும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினை பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தாரிக் தெரிவித்தார்.