வவுனியா மற்றும் மன்னாரில் கொவிட் -19 வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகி இறந்தவர்களின் உடலினை தகனம் செய்வதற்காக வவுனியா நகரசபையால் நிதி அறவிடுவது தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வவுனியா ,மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய முன்று மாவட்டங்களிலும் கொவிட்-19 வைரஸின் நோய் தாக்கத்திற்குள்ளாகி இறப்பினை தழுவி கொண்டவர்களின் உடலினை தகனம் செய்வதற்கு வவுனியா நகரசபையினால் நிதி அறவிடப்படுகிறது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் இந்த வைரஸின் நோய் தாக்கத்திற்குள்ளாகி இறப்பவர்களின் உடல்களினை தகனம் செய்யும் இடமாக வவுனியா மாவட்டம் அமைந்துள்ளது.
வவுனியா நகரசபை இங்கு ஒருவரை தகனம் செய்ய ரூபா 7000.00 த்தினை அறவிட்டு வருகிறது. இன்றைய கடினமான சூழலில் வாழும் மக்களுக்கு இந்த தொகையினை வழங்குதல் என்பது இலகுவான காரியமல்ல. எனவே இதனை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.