சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலத்தடி தொட்டியில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டாலும் அம்பந்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குடி நீர் விநியோக குழாயில் அது கலக்கப்படவில்லை என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலத்தடி தொட்டியில் மழை நீர் கலந்தமை தொடர்பில் நேற்று முன்தினம் தெரியவந்தது.
இதன் காரணமாக மழை நீருடன் கலந்த எண்ணெய் அந்த பகுதிகளில் உள்ள குடிநீர் கிணறுகளிலும், குழாய் கிணறுகளிலும் கலந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் எண்ணெய் தொடர்ந்தும் சுற்றாடலில் பரவுவதை தடுப்பதற்காக கடற்படையும், கரையோர பாதுகாப்பு திணைக்களமும் இணைந்து விசேட நடவடிக்கையினை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.