மட்டக்களப்பில் கொரோனா 3வது அலையில் 37 பேர் உயிரிழப்பு எனவே பொதுமக்கள் ஓத்துழைப்பு வழங்கினால் மாத்திரம் தான் கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும் என அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்தார்.
மட்டக்ககளப்பு போதனா வைத்தியசாலையில் 23 பேருக்கு ஓட்சிசன் செலுத்தப்பட்டு வருகின்றதுடன் 3 வது கொரோனா அலையில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் 2200 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 983 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவே பொதுமக்கள் ஓத்துழைப்பு வழங்கினால் மாத்திரம் தான் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னர் வாழ்வாதாரத்தை இழந்த வறிய குடும்பங்களுக்கான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக 82,833 குடும்பங்களுக்கு 41 கோடியே 41 இலச்சத்து 24 ஆயிரம் ரூபாவை இதுவரை பிரதேச செயலகங்கள் மூலமாக வழங்கியுள்ளோம்.
இதேவேளையில் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய தடுப்பூசி ஏற்றும் பணி எமது மாவட்டத்துக்கும் 25 ஆயிரம் கிடைக்க இருக்கின்றது இந்த தடுப்பூசிகளை 6 பிரிவுகளாக பிரித்து அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டதற்கு இணங்க எமது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எடுத்துவருகின்றார்.
எமது மாவட்டத்தில் முதியோர் இல்லங்களில் வாழும் 146 முதியோர் இருக்கின்றனர் அவர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்படும். அதேவேளை கொரோனா அதிகமாக காணப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், குறிப்பாக பொதுமக்களுடன் நேரடி தொடர்பை பேணுகின்ற அல்லது களவிஜயங்களில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள், உட்பட 6 வகையாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் 4 கிராமசேவர் பிரிவு விடுவிக்கப்பட்டதுடன் நொச்சிமுனை கிராமசேவகர் பிரிவு தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதுடன் ஏறாவூர்நகர் கிராமசேவகர் 2 பிரிவு உட்பட இரண்டு கிராமசேவகர் பிரிவு மாத்திரமே மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
பயணத்தடை விதிக்கப்பட்டு பொதுமக்களின் நடமாட்டதை நிறுத்த அரசாங்கம் அறிவித்தது அதேவேளை அன்றாட தொழில் செய்கின்ற சாதாரன கூலியாட்கள், விவசாய தொழில், கட்டுமானப்பணியாளர்கள் போன்றவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காதளவு இந்த நடைமுறையை பின்பற்றுமாறு எனக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் அநாவசியமான கூட்டங்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பேணவேண்டும் அவசியத்தை நாங்கள் பொதுமக்களுக்கு விளக்கமாக கூறியிருக்கின்றோம் எனவே தொடாந்து நாளாந்தம் மரணங்கள் தொற்று அதிகரிப்பு அவதானிக்ககூடியதாக இருக்கின்றது ஆகவே மக்கள் இதிலே கூடிய கவனம் செலுத்தி ஓத்துழைப்பு வழங்கினால் மாத்திரம் தான் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்றார்.