“நாட்டில் சட்ட ஏற்பாடுகளை மீறிக் கைது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதற்கு அரசு முழுப் பொறுப்புக்கூற வேண்டும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்பவர்களைக் கைதுசெய்யும் அளவுக்கு அரசு பயந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இணையவழி மூலம் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசுக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரிக்கும்போது, சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள் கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். பொதுமக்கள் போலித் தகவல்களைக் கதைப்பதைக் காரணம் காட்டி, குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய முடியாது.
இன்னொரு இனக் குழு தொடர்பாக வெறுப்புப் பேச்சுக்களை வெளியிடும்போதே கைதுசெய்ய முடியும்” – என்றார்.