மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள், ஊழியர்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து 15 கோரிக்கையை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை (11) வைத்தியசாலை நிர்வாக காரியாலயத்துக்கு முன்னால் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலை தாதியர்கள் ஊழியர்கள் உட்பட 26 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து 15 கோரிக்கைகளை முன்வைத்து இன்று பணிபகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர். இதனையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் வைத்தியசாலை நிர்வாக காரியாலயத்துக்கு முன்னால் காலை 7 மணிக்கு ஒன்றுகூடி பகல் 12 மணிவரையும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது தமது கோரிக்கைகளை அரசு செவிசாய்க்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதேவேளை இதனால் இன்று வைத்தியசாலைக்கு நோய்கான சிகிச்சை பெறவந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.