வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை பேருந்து மீது கல்வீச்சு: சாரதி காயம்

IMG 20210612 083422
IMG 20210612 083422

வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட இளைஞர் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளது.

முருகனூர் பகுதியில் இன்று (12) காலை 7.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சிதம்பரபுரம், ஆச்சிபுரம் பகுதியிலிருந்து வவுனியா இராசேந்திரகுளம் ஓமேக்கா ஆடைத்தொழிற்சாலை நோக்கி 28 ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது முருகனூர் விவசாய பண்ணைக் அருகே முகங்களை மறைந்தவாறு நின்ற இளைஞர் குழுவினர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கல்வீச்சு தாக்குதலையடுத்து பேருந்தினை சாரதி நிறுத்திய போது பேருந்தினுள் புகுந்த அவ் இளைஞர் குழுவினர் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டு அவ்விடத்திலிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

குறித்த பேருந்தின் கண்ணாடிகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊழியர்கள் எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை. ஆடைத்தொழிற்சாலையினால் கொரோனா தொற்று பரவுவதாக வடமாகாணத்தில் பல பகுதிகளில் எதிர்ப்புக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா காவல்துறையினர் குற்றத்தடுப்பு பிரிவினரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்