ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

Tamil News large 2772306
Tamil News large 2772306

ஸ்புட்னிக் ஏ தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகை நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

கொத்தட்டுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கிடையில், சகல வர்த்தக வலய சேவையாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நுவரெலியா பிரதேச செயலக பிரிவில் உள்ள ஹோல்புறுக் மற்றும் எல்பெத்த கிராம சேவகர் பிரிவுகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் இன்று (13) இடம்பெறவுள்ளது.

இன்று (13) முற்பகல் 8.30 முதல் ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தில் தடுப்பூசி வழங்கல் இடம்பெறவுள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் சிவக்கொழுந்து புஷ்பகாந்தன் தெரிவித்தார்.

மேலும், வட்டவளை கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று(13) தடுப்பூசி செலுத்தப்படும் என வட்டவளை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.