மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மருந்தகம் நடாத்திவந்த உரிமையாளர் உட்பட இருவரை நேற்று வெள்ளிக்கிழமை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள்.
அத்துடன் குளிசைகள் அடங்கிய பெட்டிகளை மீட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவமுகாம் புலனாய்வு பிரிவிற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான நேற்று இரவு 8.30 மணியளவில் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மருந்து விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது குறித்த மருந்தகம் அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி சட்டவிரோதமாக இயங்கிவந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மருந்தக உரிமையாளரை கைது செய்ததுடன் அங்கு வைத்தியரின் மருந்து துண்டு இல்லாமல் பெருமளவான மருந்து குளிசைகளை வாங்கிய ஒருவரையும் கைது செய்ததுடன் அவரிடமிருந்து மருந்து குளிசைகளை மீட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் மீட்கப்பட்ட மருந்து குளுசைகளுடன் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்தனர்.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.