தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் சட்டவரையறையை மீறுவோருக்கு நடவடிக்கை

d02d8a2e d88a 42f5 99e9 ffc6f551a6f5
d02d8a2e d88a 42f5 99e9 ffc6f551a6f5

கொள்ளை அடித்து எமது இருப்புக்களை பெருக்கிக்கொள்வது எமது நோக்கமல்ல. அதேநேரம் சுயலாப கொள்ளையர்களால் எமது பிரதேச கடற்றொழிலாளர்களது உழைப்புகள் உறிஞ்சப்படுவதை ஏற்கமுடியாதென தெரிவித்துள்ள தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தினர் அவ்வாறு சங்கங்களின் சட்டவரையறையை அனுசரித்து செயற்படாத தொழிலாளர்கள் அனைவரும் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டு அவர்களது தொழில் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானவையாக வரையறைசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தம்பாட்டி கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து தமது கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் சந்தைப்படுத்தலில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை யாழ் ஊடக அமையத்தில் நடாத்தியிருந்தனர்.

இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.அவர்கள் மேலும் தெரிவிக்கையில், விளையாட்டுக் கழகம், பாலர் பாடசாலை, நாடக மன்றம் என பல பொது அமைப்புகளை எமது சங்கத்தின் நிதியிலிருந்து கடந்த 60 ஆண்டுகளாக நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

இந்நிலையில் தற்போதைய கொரோனா காரணமாக தொழில் நடவடிக்கைகள் பின்தங்கியுள்ள நிலையில் கடற்றொழில் மற்றும் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள சங்கம் சற்று தளர்வுநிலை கொடுத்துவந்தது.
இதனை சாதகமாக பயன்படுத்திய எமது பிரதேசத்தில் எமது சங்கத்திலிருந்து சுயநலன்களுக்காக பிரிந்து சென்று சிலர் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை சங்க ரீதியாக நாம் விசாரணைக்கு உட்படுத்தும் போது வாழ்வாதார இழப்பு என்று காரணம் கூறி அனுதாபத்தை ஏற்படுத்தி தமது மோசடிகளையும் ஏமாற்று வேலைகளையும் மேற்கொள்கின்றனர். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்நிலையிலர் நாம் கடற்றொழில் அமைச்சரிடம் இவ்விடயத்தை கொண்டுசென்றிருந்தோம். அவரும் மூன்று தடவைகள் எமது பிரதேசத்திற்கு வந்து குறித்த பிரச்சினைக்கு இருதரப்பு இணக்கப்பாட்டுடன் தீர்வு தந்திருந்தார்.
இவ்வாறு தீர்வு காணப்பட்ட நிலையில் வேறொரு அரசியல் தரப்பினர் இதை குழப்பும் நோக்குடன் குறித்த தரப்பினரை தூண்டிவிட்டு ஊடகங்களில் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். அவ்வாறான செய்திகள் அனைத்தும் பொய்யானவை.

அதேநேரம் கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினையை கடற்றொழில் அமைச்சரிடம் தான் சென்று முறையிட முடியுமே தவிர விளையாட்டுத்துறை அமைச்சரிடம் முறையிடமுடியாது இதைத்தான் நாம் செய்தோம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறந்த சமூக சேவகராகவும் மக்களின் வாழ்வியல் தொடர்பில் அதீத அக்கறை உடையவர் என்பதாலும் எமது இரு தரப்பினரையும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்படும் பொறிமுறையையே அன்றைய கூட்டத்தில் எடுத்துக் கூறி இணக்கப்பாட்டுக்கு வரச்செய்தார்.

இன்று இன்னொரு தரப்பு அரசியல்வாதிகளின் ஏவுதலில் குறித்த தரப்பினர் நாக்கு புறழ்வுடன் பேசி பொய்யான கருத்துக்களை ஊடகங்களுக்கு கொடுத்துவருகின்றனர்.
இதை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் எமது கடற்றொழில் சங்கங்களுடன் இணைந்து அவர்கள் செயற்பாடாத பட்சத்தில் அவர்களது உறுப்புரிமைகளை இரத்து செய்து சட்ட நடவடிக்கைகளூடாக நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றும் தெரிவித்தனர்.

அத்துடன் இவர்களது இத்தகைய மோசடியான செயற்பாட்டை சமூக ஒற்றுமை என்று பார்த்து இனியும் பொறுத்துக் கொண்டிருக்கமுடியாது என்றும் சுட்டிக்காட்டிய குறித்த பிரதிநிதிகள் குறித்த நடைமுறையை தாம் செய்வதற்கு தயாராகவே உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் தனிப்பட்டவரது உறவுமுறைக்காக எமது உழைப்பை நாம் இழக்க முடியாது. 53 இலட்சம் ரூபா நிதி கடந்த காலத்தில் சூறையாபடப்பட்டுள்ளது. இதை சட்டரீதியாக அணுகியிருந்த நாம், அதனை கட்டுமாறு குறித்த நபருக்கு உத்தரவும் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிதியை செலுத்தவேண்டிய நிலை உருவாகுவதாலேயே குறித்த நபர் எமது சங்கத்திற்குள் இவ்வாறான குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றார் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.