யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய பெண் ஒருவரே இன்று உயிரிழந்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 945ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 33 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
அத்துடன், யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட குருநகரில் ஜே 69 பிரிவான ரெக்குலமேசன் மேற்கு மற்றும் ஜே 71 பிரிவான குரநகர் மேற்கு கிராம அலுவலகர் பிரிவுகளை தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரினால் கொவிட்-19 நோய் பரவலை கட்டுப்படுத்தும் செயலணிக்கு பரிதுரைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அந்த பகுதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளிலும் ஆயிரத்து 599 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 820 பேர் வசிக்கின்றனர். அவர்களில் ஜூன் மாதத்தில் 72 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.