பௌத்த சின்னங்கள் வைப்பதற்கு விந்தன் எதிர்ப்பு

vinthan
vinthan

இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பௌத்த சின்னங்கள் வைப்பதை சிறைச்சாலை திணைக்களம் நிறுத்த வேண்டும் எனவும் அதற்கு யாழ்.மாநகர சபை துணை போகுமாயின் மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் சபை அமர்வுகள் புறக்கணித்து முழுமையான எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

யாழ். நகரில் அமைந்துள்ள சிறைச்சாலை திணைக்களத்துக்கு முன்பாக இரவோடு இரவாக பௌத்த சின்னங்கள் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இது தமிழ் சிங்கள மக்களிடையே முரண்பாடு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எனினும் குறித்த சிலையை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதனை அடுத்து அவை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறைச்சாலை திணைக்களம் மீண்டும் பௌத்த சின்னங்கள் வைக்க முன் வருமேயானால் அது இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும்.

எனவே யாழ்ப்பாணம் மாநகரசபை இதில் கடுமையான நடவடிக்கை எடுத்து அந்த நிகழ்வை தடுத்து நிறுத்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது குறித்த மாநகரசபை கவனம் எடுக்காத பட்சத்தில் யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து சபை அமர்வு தொடர்ச்சியாக புறக்கணிப்பதற்கு முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் வடக்கில் பௌத்த சின்னங்கள் படிப்படியாக புதிதாக முளைத்து வருவதாகவும் யாழ்ப்பாணத்தில் தற்போது எழுந்துள்ள இந்த பிரச்சனை மீண்டும் தொடருமாயின் மாபெரும் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் அதற்கு இங்குள்ள வர்த்தக சங்கங்கள் பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளார்.