2 வது தடுப்பூசி குறித்த அறிவுறுத்தல்!

தடுப்பூசி
தடுப்பூசி

யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆரம்பத்திலும் கொரோனா நோய்க்கு எதிரான சினோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்றன.

இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் கடந்த ஜூன் 28 ஆம் திகதி முதல் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி கடந்த 28 ஆம் திகதி 10,110 பேருக்கும் 29 ஆம் திகதி 13,182 பேருக்கும் 29 ஆம் திகதி 10,090 பேருக்கும் ஆக மொத்தம் 33,382 பேருக்கு யாழ். மாவட்டத்தில் 2 வது தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து ஜூலை 01 ஆம் 02 ஆம் திகதிகளிலும் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையங்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெறும். இந்த 5 நாட்களிலும் 2 வது தடுப்பூசியினை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி சனிக்கிழமை அந்தந்த பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் காலை 8 மணி முதல் தடுப்பூசி வழங்கப்படும்.

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி யாழ். போதனா வைத்திய சாலையிலும் தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்திய சாலைகளிலும் வழங்கப்பட்டிருந்தது.

இவர்களுக்கான 2 வது தடுப்பூசி ஜூலை 03 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் இதே வைத்தியசாலைகளில் வழங்கப்படும். எனவே தவறாது குறிக்கப்பட்ட இந்த தினத்தில் சமூகமளித்து உங்களுக்கான 2 வது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.