தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் மேற்கொள்ளப்படும் போராட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை 1600ஆவது நாளை எட்டுவதை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.
இன்று வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் திங்கள் 1600வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் செய்யவுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியம் வரி சலுகையை பயங்கரவாத தடை சட்டத்தை அகற்ற மட்டுமல்லாமல், அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரி சலுகையை நிறுத்துவது பற்றிய பேச்சு இலங்கையை பதட்டப்படுத்துகிறது. இதனை இலங்கையின் நடவடிக்கைகளால் நாம் அறியக்கூடியதாகவுள்ளது.
1978 ல் பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து, ஆயிரக்கணக்கான தமிழர்கள் அரசியல் கைதிகளாக சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இப்போது ஐரோப்பிய ஒன்றிய எச்சரிக்கையின் காரணமாக 76 சிங்களவர்களுடன் 16 தமிழர்களும் மட்டுமே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரி சலுகையை பயங்கரவாத சட்டத்தை அகற்ற மட்டுமல்லாமல், அரசியல் தீர்விற்கும் பயன்படுத்த வேண்டும். யுத்தத்தின் போது இலங்கை ஐ.நா மற்றும் இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்களுக்கும் 2009 ல் அரசியல் தீர்விற்கும் உறுதியளித்தது.
ஐரோப்பிய ஒன்றியம், ஜனாதிபதி பைடன் நிர்வாகத்தின் ஆசீர்வாதத்துடன் இலங்கையில் அரசியல் தீர்வை அடைய முடியும். தமிழர்களிடையே “பொது வாக்கெடுப்பு” எடுப்பதன் மூலம் இந்த தீர்வை அடைய முடியும்.
எந்தவொரு தீர்வும் பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தமிழ் தாயகத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்திற்குள் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழ முடியும் என்பதை கடந்த 74 ஆண்டுகளாக தமிழர்கள் கற்றுக் கொண்டனர்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
சிங்களவர்களின் அடக்கு முறையால் தமிழர்கள் மௌனமாக்கப்பட்டுள்ளனர் என்பதையும், கொழும்பின் சலுகைகளால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாக்கப்பட்டுள்ளனர் என்பதையும் நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம் என்றார்.