எரிபொருள் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு , உரப்பற்றாக்குறை, கொழும்பிலுள்ள முக்கிய இடங்களை தனியாருக்கு விற்றல் உள்ளிட்ட அரசாங்கத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஞாயிற்றுக்கிழமை மொனராகலை மாவட்டத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,
விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை வழங்குவதாக ராஜபக்ஷக்கள் கூறினர். ஆனால் இன்று கடைகளிலும் உரத்தை வாங்கக் கூடிய நிலைமை இல்லை. விவசாயம் முடங்கி மக்களுக்கு உண்பதற்கு உணவு அற்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. அது மாத்திரமல்ல. அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
எதிர்கால சந்ததியினருக்கு கொழும்பில் காணப்படும் முக்கிய இடங்களை ராஜபக்ஷக்கள் விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். இராணுவம், கடற்படை உள்ளிட்ட முக்கிய இடங்கள் விற்கப்படுகின்றன.
இந்த அரசாங்கம் நீதி மன்றத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கிறது. சட்டத்தை மீறி மரங்களை வெட்டுகின்றன். சிங்கராஜ , யால உள்ளிட்ட வளங்கள் அழிக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றார்.