பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்: மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

1625372487 school 02 1
1625372487 school 02 1

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் வகுப்புகளை மீள ஆரம்பிக்கும் திகதி தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இன்று (04) தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றுப் பரவல் நிலைமையால் கடந்த இரண்டு மாதங்களாக பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இவற்றை மீளத் திறப்பது குறித்து கல்வி அமைச்சு சுகாதாரத் தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றது.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துக் கூறியுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இதுவரையில் இவற்றைத் திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழக அலுவலகப் பணியாளர்களுக்கும் கொரோனாத் தடுப்பூசிகளைச் செலுத்தும் வேலைத்திட்டங்களை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும், இதன்பின்னர் இது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.