முத்துராஜவலயத்தின் ஈரவலய பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம்!

1524122301 muthurajawala
1524122301 muthurajawala

முத்துராஜவெல ஈரவலயத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பை மண்ணால் நிரப்பி முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டம் குறித்து மக்கள் கருத்தை தெரிவிப்பதற்கும் முறைப்பாடளிப்பதற்கும் வழங்கப்பட்டுள்ள காலவகாசத்தை நீடிக்க வேண்டும்.

ஈரவலய நிலப்பரப்பு மண்ணால் நிரப்படுமானால் முத்துராஜவலய ஈரவலயத்தை அண்மித்த பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கும் நிலை ஏற்படும் என முத்துராஜவெல ஈரவலயத்தை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் தினூஷ நாணயக்கார தெரிவித்தார்.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பல்வேறு முறையற்ற அபிவிருத்தி செயற்பாடுகளினால் முத்துராஜவெல ஈரவலயம் பெரும் பாதிப்பை எதிர் நோக்கியுள்ளது.

நாட்டுக்கே உரித்தான உயிரிணங்ளின் இயற்கை வாழிடம் அழிக்கப்பட்டுள்ளன. இயற்கையினை அழித்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதால் எதிர்காலத்தில் பெரும்பாதிப்புக்கள் ஏற்படும்.

இலங்கை மின்சார சபையின் தேவைக்காக முத்துராஜவெல ஈரவலயத்தின் 100 ஏக்கர் நிலப்பரப்பு மண்ணால் நிரப்பப்பட்டு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி முதற்கட்ட அறிக்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் மக்களின் கருத்தையும், முறைப்பாடையும் முன்வைக்க ஒரு மாத காலப்பகுதி வழங்கப்பட்டது.

கடந்த மாதம் முழுவதும் நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தவில்லை.

மக்களின் கருத்துக்கள் மற்றும் குறைப்பாடுகள் கிடைக்கப் பெறாவிட்டால் முதற்கட்ட அறிக்கை முழுமையாக செயற்படுத்தப்படும்.

முத்துராஜவெல ஈரவலயத்தின் ஒரு பகுதி மண்ணால் நிரப்பட்டால் 2012 ஆம் ஆண்டு செந்தரவு புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அருகி வரும் உயிரினங்களுக்கும், உயிர்பல்வகைமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

முத்துராஜவெல ஈரவலய பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்டவிரோத அபிவிருத்திகள் கம்பஹா மாவட்டம் வெள்ள நீரில் மூழ்குவதற்கு பிரதானகாரணியாக அமைகிறது.

ஈரவலயத்தில் 100 ஹேக்கர் நிலப்பரப்பு மண்ணால் நிரப்பட்டால் முத்துராஜவெல ஈரவய பகுதி முழுமையாக வெள்ள நீரில் மூழ்கும் நிலை ஏற்படும். ஆகவே மக்களின் கருத்துக்களை குறிப்பிடுவதற்கு தேசிய சுற்று சூழல் அதிகார சபை உரிய காலம் வழங்க வேண்டும் என்றார்.