தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

gmoa
gmoa

சுகாதாரத்துறைசார் சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நேற்று முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மேலும் சில தொழிற்சங்கங்கள், பணிப்புறக்கணிப்பு உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகின்றன.

இதற்கமைய, எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

தேசிய வேதன கொள்கைக்கும், அங்கீகரிக்கப்பட்ட முறைமைக்கும் மதிப்பளிக்காமல், தங்களது கோரிக்கைகளுக்கு நேரடியாக அமைச்சரவை அனுமதி ஊடாக தீர்வைப் பெற்றுக்கொள்ள சில தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்குமாயின், ஒட்டுமொத்த அரச சேவையும் பிரச்சினைக்குரிய நிலைக்குள் தள்ளப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தாதியர்களின் கோரிக்கையை வேதன ஆணைக்குழுவுக்கு அனுப்பி, உரிய முறைமையின் கீழ் அதனை நடைமுறைப்படுத்துமாறும் அந்த சங்கம் கோரியுள்ளது.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் தவறுமாயின், விருப்பமின்றியேனும் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவேண்டி ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.