முல்லைத்தீவில் வாளினால் வெட்டி காரினை எரியூட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டோர் கைது

30297a6e 1ae1 4d53 856a 7dbfefa2c895
30297a6e 1ae1 4d53 856a 7dbfefa2c895

முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும் காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 27ஆம் திகதி கள்ளப்பாட்டுப்பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்கள் இரண்டு மீது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றிருந்தது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது.

காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் நவாலியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஆறு பேரும் சம்பவம் தொடர்பில் ஒப்புக்கொண்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்கள், வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் 6 பேரும் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரினால் இன்றிரவு முற்படுத்தப்பட்டனர்.