திருகோணமலை – குச்சவெளி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பாழடைந்த வீட்டில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இக்கைக்குண்டு இன்று (11) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திரியாய 5 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த முன்னாள் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் புஸ்பராசா என்பவரின் வீட்டிலேயே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த வீட்டு உரிமையாளர் யுத்த காலத்தின் போது திருகோணமலை நகர் பகுதியில் வசித்து வந்ததாகவும், அவருடைய உறவினர்கள் காணியை துப்பரவு செய்ய முற்பட்ட போது வீட்டுக்கு முன்னால் கைக்குண்டை கண்டதாகவும் இதனை அடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறையிட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
திருகோணமலை சர்தாபுற விசேட காவல்துறை அதிரடி படையினர் குறித்த குண்டை மீட்டுள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்ற அனுமதியைப் பெற்றதை அடுத்து குண்டினை செயலிழக்கச் செய்ய உள்ளதாகவும் குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.