ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தையும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரத்தையும் தொடர்புபடுத்த வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்திய அரசாங்கம் அதன் அரசியலமைப்பின் சரத்து 370 மற்றும் 35 ஏ என்பவற்றை இரத்துச் செய்ததன் ஊடாக ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அதன் சுயாட்சியை முடிவிற்குக் கொண்டு வந்திருந்தது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையின் தமிழர் பிரச்சினைக்கு விரும்பத்தக்க தீர்வொன்று வழங்கப்படுவதற்கு இந்தியா அழுத்தம் வழங்குமா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இந்நிலையில், கூட்டமைப்பு இன்னமும் இந்தியாவை நம்புகின்றதா என்று வினவிய போதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
ஜம்மு – காஷ்மீர் தொடர்பில் இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அவர்களது நாட்டின் உள்விவகாரமாகும். அதில் எம்மால் தலையிடவோ அல்லது கருத்துகூறவோ முடியாது. ஆனால் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைந்த வடக்கு, கிழக்கில் மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்று இணங்கப்பட்டிருக்கிறது. அது காலாவதியாக கூடியதொரு ஒப்பந்தமல்ல.
எனவே தற்போதும் தமிழர் பிரச்சினை தொடர்பில் நியாயமான உரிய தீர்வை வழங்குவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கு உண்டு. அதனடிப்படையில் அவர்களுடைய கடமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலாநாதன் தெரிவித்துள்ளார்.