மட்டக்களப்பில் 6 மாதத்தில் 14 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

download 1 63
download 1 63

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 14 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதுடன் 63 சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் பெண்களுக்கு எதிராக 1513 குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மாவட்டத்திலுள்ள 12 காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் யூன் மாதம் 31 ம் திகதி வரையிலான 6 மாதங்களில் மாவட்டத்திலுள்ள 12 காவல் நிலையங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக முயற்சி, சிறுவர் கடத்தல் போன்ற 31 பெருங்குற்றங்களும், 32 சிறுகுற்றங்களுமாக 63 குற்றங்கள் தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதேவேளை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாக ஆகக்கூடியதாக ஏறாவூர் காவல்துறை பிரிவில் 322 முறைப்பாடுகளும், களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவில் 186 முறைப்பாடுகளும் காத்தான்குடி காவல்துறை பிரிவில் 160 முறைப்பாடுகள் உட்பட 1513 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன் பெண்களுக்கு எதிராக 7 பெருங்குற்றங்களும் 71 சிறு குற்றங்களும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறுவர்களுக்கு எதிரான பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை சம்பவங்கள் இந்த கொரோனா காலத்திலும் கூட அதிகரித்துள்ளது கவலைக்குரிய விடயம் இருந்த போதும் பெற்றோர் பிள்ளைகளை அவதானித்து கண்காணித்து விழிப்புடன் செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.