வன்னிவாழ் மக்களே உங்கள் கைகளால் உங்கள் கண்களை குத்திக்கொண்டிருக்கின்றீர்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நடைபெற்ற பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
இலங்கையில் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டு செல்வது மிகவும் வேதனையளிக்கின்றது இது சார்ந்த அனைத்து அதிகாரிகளும் அக்கறையுடன் செயற்படவேண்டும் பணம் படைத்தவனுக்கும் வசதி வாய்ப்பு படைத்தவனுக்கும் ஒரு நியாயம் ஏழை மக்களுக்கு இன்னெரு நியாயம் என்று இந்த அரசு நீதிவழங்கக்கூடாது 15 அகவை பூர்த்தி செய்யாத பெண் பிள்ளையினை வேலைக்கு அமர்த்தக்கூடாது அல்லது வேலைக்கு விடக்கூடாது என்பது ஒரு ஏழைத்தாய்க்கு தந்தைக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு அமைச்சராக இருந்தவர் மக்கள் பிரதிநிதிக்கு அவரின் குடும்பத்திற்கு இந்த சட்டம் தெரியாமல் இருப்பது என்பது நியாயம் அல்ல.
டயகம சிறுமி உயிரிழப்பின் மர்மம் வெளிக்கொணரவேண்டும் நீதி நிலைநாட்டப்படவேண்டும் இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் விடுக்கப்பட்ட சவாலாக இதனை எடுக்கவேண்டும்.
தாய்மார்களே உங்கள் பிள்ளைகளை இப்படிப்பட்ட போலிக்காரர்களிடம் வேலைக்கு விடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள் பெண்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் ஒவ்வொரு தாயும் தங்கள் பிள்ளைகளை கண்ணிற்கு எண்ணெய் விட்டது போல் கவனிக்கவேண்டும்
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் கம்பனிகளால் நசுக்கப்படுகின்ற தோட்ட தொழிலாளர்கள் அவர்களுக்கு ஒரு நியாயம் ஏனையவர்களுக்ளு ஒரு நியாயம் என்று இந்த அரசு செயற்படுகின்றது.
வன்னிவாழ் மக்களே உங்கள் கைகளால் உங்கள் கண்களை குத்திக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதை குறிப்பிடுகின்றேன்.
இவ்வாறு சிறுவர் மற்றம் பெண்கள் துஸ்பிரயோகங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.