வலிந்து காணாமலாக்கப்பட்டோரது பிள்ளைகளுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன், கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார்.
பிரான்சில் வசித்துவரும் திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியை சேர்ந்த அருளாணந்தம்-வசந்தாதேவி என்பவரது அறுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கற்றல் உபகரணங்களை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோரது பிள்ளைகளுக்கு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்திவரும் உறவுகளின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை இன்று திங்கட்கிழமை மாலை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் வழங்கிவைத்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் இரா.மயூதரன் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஆறாம் ஆண்டு தொடக்கம் உயர் தரம் வரையான வகுப்புகளில் கல்வியைத் தொடர்ந்துவரும் 25 மாணவர்களுக்கு முப்பதாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகம் மற்றும் செயற்றிட்ட ஆக்கங்களுக்கான உப செயலாளர் த.சிற்பரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.