அபாய நிலையிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க சகலரும் அணிதிரளுங்கள் – மங்கள

mangala
mangala

“சிம்பாப்வே அல்லது வெனிசுவேலா நாடுகளுக்கு நேர்ந்த நிலைமை இலங்கைக்கு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது. இந்தநிலையில் இருந்து நாட்டை மீட்க இன, மத, மொழி, சாதி வேறுபாடு இன்றி இலங்கையர் என்ற அடையாளத்துடன் அனைவரும் அணிதிரள வேண்டும். இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.

கறுப்பு யூலை என்ற கரும்புள்ளி ஏற்பட்டு 38 வருடங்கள் நிறைவுறும் நிலையில், இதனை நினைவுபடுத்தி மங்கள சமரவீர தனது அரசியல் நகர்வை ஆரம்பித்துள்ளார்.

கறுப்பு யூலை என்ற இனக் கலவரம், போலி தேசப்பற்றாளர்களினால் நாட்டை பின்நோக்கி நகர்த்துவதற்கான பாடுபாதக செயல் என்றும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மங்கள சமரவீர கண்டித்தார்.

இன,மத, மொழி வேறுபாடு இன்றி இளைஞர்களை அணிதிரட்டியே நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் அவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நல்லாட்சி அரசு ஆட்சிப் பொறுப்பை தற்போதைய அரசுக்கு ஒப்படைத்தபோது நான் நிதி அமைச்சராக பதவி வகித்தேன். அப்போது அந்நிய செலாவணி கையிருப்பு 7.6 பில்லியன் டொலர்கள் காணப்பட்டன. அந்தத் தொகை எதிர்வரும் நாள்களில் 2.6 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடையும்.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பமாக இதனைக் கருத வேண்டும்.

கடந்த 2020ஆம் ஆண்டில் அரச வருமானங்கள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. வரவு – செலவுத் திட்ட இடைவெளியும் பாரியளவில் அதிகரித்துள்ளது.

இந்த அரசு நினைத்துப் பார்க்க முடியாத அளவு பணத்தை அச்சிட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட பொருட்களுக்கு வரிசையில் நிற்கும் காலத்தை விடவும் மோசமான சிம்பாப்வே மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகளின் பொருளாதார நிலைமைக்கு இலங்கை செல்லக்கூடிய ஆபத்து காணப்படுகின்றது.

நாட்டின் உரத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டொலர் பற்றாக்குறையால் வெளிநாடுகளிலிருந்து மருந்துப் பொருள்கைள தருவிக்க முடியவில்லை.

நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால் அதனை அரசு மூடி மறைத்துவிட்டு உடல் நலத்துக்கு நன்மை ஏற்பட வேண்டுமெனில் சைக்கிளில் பயணிக்குமாறு கோரக்கூடும்.

தேசப்பற்று என்ற போலி கொள்கைகளின் காரணமாக இந்த நாடு பல தசாப்தங்களாக பின்நோக்கி நகர்ந்து சென்றுள்ளது.

தேசப்பற்று என்று மக்களை ஏமாற்றிய அரசை மட்டுமன்றி அதற்கு ஏமாற்றமடைந்த மக்களும் இந்த அழிவுக்குப் பொறுப்பாகும்.

கோட்டாபய தோல்வியடைந்தார் என்பதனை விடவும் அவர் பிரதிநிதித்துவம் செய்த கொள்கைகளே தோல்வியடைந்துள்ளன.

இனவாத, மதவாத காலம் கடந்த பழைய கொள்கைகள் கோட்பாடுகளே தோல்வியடைந்துள்ளன.

உண்மையிலேயே நாட்டுப்பற்று என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

சிங்கள – பௌத்த பெயரில் தமிழரைக் கொல்வது தேசப்பற்றாகாது.

சிங்களம் என்று சொல்லி கடைகளை எரிப்பதனாலும், வீடுகளை உடைப்பதனாலும் அதிகளவில் பாதிக்கப்படுவது இறுதியில் சிங்களவர்களே.

ராஜபக்‌ச விரோத கூட்டணிகளை அமைப்பதில் மட்டும் வெற்றி கிடைக்காது. கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுடன் தேசிய கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

நடுநிலையான கொள்கைகள் பின்பற்றப்பட்டு மெய்யான தேசப்பற்றை உருவாக்குவதற்கு நாட்டின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்” – என்றார்.