சிறுவர்கள் தொடர்பான ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நபர் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரே நாளில் இவ்வாறு 100 ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த நபரை கைது செய்ய காவற்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
சிறுவர்கள் தொடர்பான ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களை கைது செய்வதற்காக விசாரணை பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
காவற்துறை மகளீர் சிறுவர் பிரிவில் கடந்த ஜூன் மாதம் 17 ஆம் திகதி இந்த பிரிவு அமைக்கப்பட்டது. நவீன தொழிநுட்பங்களுடன் செயல்படும் இந்தப்பிரிவினால் நாட்டில் எந்தப் பகுதியிலாவது சிறுவர்கள் தொடர்பான ஆபாச காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டால் உடனடியாக அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.