மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி வைரவர் ஆலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்களை ஒன்று திரட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (08) தீ மிதிப்பு சடங்கு நடாத்திய நிலையில் காவல்துறையினர் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு ஆலய தலைவர் செயலாளர் உட்பட சட்டத்தை மீறிய 3 பேருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினருடன் இணைந்து சம்பவதினமான இன்று குறித்த ஆலயத்தை முற்றுகையிட்டு அங்கு சுகாதார நடைமுறைகளை மீறி ஆலயத்தில் மக்களை ஒன்றிணைத்தமை மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது மீறி செயற்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டு ஆலய தலைவர் செயலாளர், பொருளாளர் உட்பட 3 பேருக்கு எதிராக காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்து அவர்களை எதிர்வரும் புதன்கிழமை (11) ம் திகதி நீதிமன்றத்தில் ஆயராகுமாறு உத்தரவிட்டு அவர்களை விடுவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதேவேளை குறித்த காவல் பிரிவிலுள்ள களுவங்கேணி மாரியமன் ஆலய உற்சவத்தில் சுகாதார சட்டத்தை மீறி பங்கேற்ற 114 பேருக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.