சிறுவர்களை சுற்றுலா அழைத்து சென்ற தனியார் கல்வி நிலையம் மீது விசாரணை!

121
121

கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வவுனியாவில் இருந்து நுவரெலியாவிற்கு சிறுவர்களை சுற்றுலா அழைத்து சென்ற தனியார் கல்வி நிலையம் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தினசரி 50 க்கு மேற்பட்ட மரணங்களும் நிகழ்ந்த வண்ணமுள்ளது. அத்துடன் மாகாணத்திற்கிடையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், அத்தியாவசிய தேவை நிமிர்த்தம் மாத்திரம் பயணங்களை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆரம்ப கல்வி பாடசாலையினர் சிறுவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் என 50க்கு மேற்பட்டவர்களுடன் நுவரெலியா நோக்கி தனியார் பேரூந்தில் இன்று (08.08.2021) அதிகாலை சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து நாடு அபாய கட்டத்தில் உள்ள நிலையில், பொறுப்பாக செயற்பட வேண்டியவர்கள் பொறுப்பற்ற விதமாக சுற்றுலாப் பயணத்திற்கு சிறுவர்களை அழைத்து சென்றுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் சுகாதாரப் பிரிவினருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த கல்வி நிலையத்தின் செயற்பாடு தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.