ஓட்டமாவடியில் கொரோனா உடலம் அடக்கம் செய்ய இடப் பற்றாக்குறை!

WhatsApp Image 2021 08 08 at 20.19.23
WhatsApp Image 2021 08 08 at 20.19.23

மட்டக்களப்பு ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்  ஜனாஸாக்கள் மற்றும் உடல்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08)  வரை 1437 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை நாளாந்தம் 25 க்கு மேற்பட்ட உடல்கள் வந்த வண்ணமுள்ளதால்  இனிவரும் நாட்களில் உடல்கள் அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் கவலை தெரிவித்துள்ளார். 

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந்த பொது மயானத்திலே இந்த உடலகங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.  இதனை எமது சபை பெறுப்பேற்று மனிதவலு இயந்திரவலு என்பவற்றை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த உடல்களை அடக்கம் செயவதற்கு 3 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி  அதில் உடல்கள் அடக்கம் செய்துவந்த நிலையில் இந்த காணி போதாது என அதனுடன் இணைந்த மேலும் இரண்டு ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி 5 ஏக்கர் காணியில் 40 இந்துக்கள் , 28 கிறிஸ்தவர்கள், 21 பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 1437 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது

இதில் அடக்கம் செய்யபப்பட்ட இடங்களில் அடையாள கல்கள் நாட்டப்பட்டு இலக்கங்கள் இடப்பட்டு அந்த இலக்கங்களின் உடல்கள்  யாருடையது என்ற பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு பிரதேச சபையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த 5 ஏக்கர் காணியிலே இன்னும் சுமார் 500 உடல்கள் மட்டுமே  அடக்கம் செய்யமுடியும். இருந்தபோதும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாளாந்தம் 25 அல்லது 30 உடல்கள் நாடளாவிய ரீதியில் இருந்து வருகின்றதன் காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் இந்த இடம் முடிந்துவிடும்.

எனவே மாற்று இடத்துக்கு எங்கு செல்வது என்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவே  உடனடியாக ஒரு இடத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.