செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்- பீற்றர் இளஞ்செழியன்

received 518233775947543
received 518233775947543

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து சிறிலங்கா விமானப்படை கிபிர் விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் பாடசாலை மாணவிகள் 54 பேரும் சிறுவர் இல்ல பணியாளர்கள் 7 பேரும் உள்ளடங்கலாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டதன் 15 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

வருடந்தோறும் குறித்த படுகொலை நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் பகுதியில் விமான தாக்குதல் நடாத்தப்பட்ட சிறுவர் இல்ல வளாகத்தில் அனுஸ்டிக்கப்படுவதோடு தமிழர் தாயகத்தில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவது வழமை இருப்பினும் இம்முறை குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளை  அனுஸ்டிக்க காவற்துறையினர் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் தடைவிதித்துள்ளனர்

இந்நிலையில் முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் 8 பேரும் குறித்த விமான தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர் பல்வேறு இடங்களிலும் இன்று இராணுவத்தினர் காவற்துறையினர் புலனாய்வாளர்கள் நிகழ்வுகளை தடை செய்யும் முகமாக குவிக்கப்பட்டு இருக்கின்றனர்

இந்நிலையில் சற்று முன்னர் முல்லைத்தீவு மகா வித்தியாலய முன்றலுக்கு வருகை தந்த தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் நினைவாக சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்

குறித்த விமான தாக்குதலில் மு /முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவிகள் கம்சனா ராஜ்மோகன்,கலைப்பிரியா பத்மநாதன்,தனுஷா தணிகாசலம்,சுகந்தினி தம்பிராசா,வத்சலாமேரி சிவசுப்பிரமணியம்,திவ்யா சிவானந்தம்,பகீரஜி தனபாலசிங்கம்,கெலன்சுதாஜினி மார்க்குப்பிள்ளை ஆகிய எட்டு பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது