இந்தியாவின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஏதிலிகள் சிறப்பு முகாமில் தங்கியிருந்த 16 இலங்கை பிரஜைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஏதிலிகள் சிறப்பு முகாமில் 84 இற்கும் அதிகளவானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
இந்தநிலையில் அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், நேற்றைய தினம் இவ்வாறு தற்கொலை செய்துக்கொள்வதற்கு முயற்சித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அதனை தடுத்துள்ளதோடு, அவர்களை திருச்சி அரச மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாவட்ட ஆட்சியாளர் நேரில் சென்று ஆராய்ந்துள்ளதுடன், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.