மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில – ஹம்பேகமுவ வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஹம்பேகமுவ கொட்டவெஹெரமங்கட 1ஆம் மைல்கல் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தருவன் சங்கல்ப (வயது 16), இசுரு லக்ஸ்மன் பிரியதர்ஸன (வயது 17) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் முச்சக்கரவண்டியில் பயணித்தபோது முச்சக்கரவண்டியானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகிச் சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட மூவரும் படுகாயமடைந்த நிலையில் ஹம்பேகமுவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இளைஞர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்படும்போது உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முச்சக்கரவண்டி சாரதி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.