ஊடகவியலாளரின் வீடு உட்பட இரு வீடுகள் வன்முறை கும்பல்களால் சேதம்

manippai
manippai

யாழ்.மானிப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உட்பட இரு வீடுகள் வன்முறை கும்பலால் சேதமாக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் கட்டுடை அரசடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த வன்முறை கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதமாக்கியதுடன், மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கியுள்ளனர்.

குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த பாழடைந்த கட்டடம் ஒன்றினுள் சந்தேகத்திற்கு இடமான கும்பல் வந்து செல்வதாகவும், அவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் என அடையாளம் காணப்பட்டமையால் அந்த கும்பலை அங்கிருந்து அகற்றும் நோக்குடன் வீட்டு உரிமையாளருடன் அருகில் வசிப்பவர்களுமாக இணைந்து அந்த கட்டடத்தை இடித்தழித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கும்பலே இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்லும் போது, அந்த வீட்டிற்கு அருகில் வசித்து வரும் வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளரான இ.ராஜேஸ்கரனின் வீட்டு வேலி, வாயிற் கதவு என்பவற்றையும் சேதப்டுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமையை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை நேற்றைய தினம் காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் யாழில் ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் இயங்குவதாகவும் அவர்களை புதுவருடத்திற்கு முன்னர் அடக்குவோம் என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் தெரிவித்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது