தேங்கியுள்ள சரீரங்களை அப்புறப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்!

kekaliya
kekaliya

நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் நீண்ட காலமாக தேங்கியுள்ள, அடையாளம் காணப்படாத உடல்களை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

சட்ட நடவடிக்கை மற்றும் பல்வேறு காரணங்களால் சில உடல்களை மருத்துவமனைகளில் இருந்து விடுவிக்க முடியாதுள்ளதாகவும், அவற்றை விரைவில் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரச ஐக்கிய தாதியர் சங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடன்போதே, இது குறித்து ஆராயுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக குவிக்கப்பட்டிருந்த பல உடல்கள், அண்மையில் மருத்துவமனைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இதனையடுத்து மீதமுள்ள உடல்களை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.

இதற்கிடையில், சில மருத்துவமனைகளில் உள்ள பழுதடைந்த குளிர்பதன கிடங்குகளை விரைவில் சரிசெய்யுமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதன்படி, மருத்துவமனைகளில் தேவையற்றவாறு உடல்கள் தேங்குவதைத் தடுக்க எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.