நாட்டில் மீன்பிடி, விவசாயத்துக்கான கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும் – றிஹான்

Saleem Mohamed Rihan 1
Saleem Mohamed Rihan 1

இரு தசாப்தங்களுக்கு முற்பட்ட காலத்தில் மீனவ சமூகமும், விவசாய சமூகமும் பெரும்பான்மையாக இருந்தன. ஆனால், தற்காலத்தில் அதனுடனான தொடர்பு அரிதாகவே காணப்படுகின்றது. இந்த நிலை ஏன் உருவானது? என இளைஞர் நாடாளுமன்ற, கப்பல் மற்றும் துறைமுக பிரதியமைச்சர் எஸ்.எம்.றிஹான் கேள்வி எழுப்பினார்.
அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,

ஒரு சமூகம் அறிவியல் ரீதியாக முன்னேறுவதற்கு கல்வி அறிவு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. ஆனால், இன்று கல்வி கற்று அதனுடான தொழிலைப் பெற்றால் மட்டுமே, சமூகத்திலும் கூட ஒரு அந்தஸ்து வழங்கப்படுகின்றது. சமூகத்தில் ஒரு கருத்தினை முன்வைப்பதற்கு, சமூகச் செயற்பாடுகளை செய்வதற்கு பட்டம் பெற்றவராக இருக்க வேண்டுமா? இதற்கான விடையை நீங்கள் விளங்கிகொள்ள முடியும்.

எமது பிராந்தியத்தில் மீனவரும் விவசாயியும் இல்லை என்றால் திண்டாடும் நிலை உருவாகும். ஏன் என்றால் இன்னும் கூடியது 5 ஆண்டுகளின் பிற்பாடு யார் மீன் பிடிக்கச் செல்வது? யார் விவசாயம் செய்யச் செல்வது? இந்த வினாக்கான விடை கானல் நீராகவே இருக்கும். மிக விரைவில் இந்த பிரச்சினையை எதிர்நோக்க உள்ளோம். அனைவரும் இதுபற்றி சற்று சிந்தியுங்கள்!

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பெரும் அளவிலான மீன்கள் பிடிக்கப்படுகின்றன மற்றும் பெரும் அளவிலான வேளாண்மை செய்யப்படுகின்றது. எமது நாடும் இறக்குமதிகளை ஏற்கும் நாடாக காணப்படுகிறது. ஏன் எம் நாட்டில் எல்லா வளமும் இருந்தும் மற்றைய நாட்டில் கை ஏந்துகின்றோம்? காரணம், நாங்கள் சோம்பேறிகள் ஆகிவிட்டோம். ‘ஆகிவிட்டோம் என்பதை விட ஆக்கப்பட்டுவிட்டோம் என்பதே உண்மை’.

எமது நாட்டில் மீன்பிடி மற்றும் விவசாயத்துக்கான கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். நமது இளைஞர்களுக்கு இதனுடனான அறிவு வழங்கப்படுதல் தலையாய கடமையாகக் காணப்படுகின்றது.

மீனவனையும், விவசாயியையும் எப்போது நாம் கீழத்தரமாக நோக்க ஆரம்பித்தோமோ அன்று எம் சமூகம் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. உங்களால் அவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கான சமூக உரிமை மற்றும் சமத்துவத்தை அளியுங்கள். ‘மீனவ சமூகத்தை சார்ந்தவன் என்ற அடிப்படையில் மீனவ மற்றும் விவசாயியின் குரலாக உங்கள் முன்’ என்றும் தெரிவித்தார்.